புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (58) தமிழழகன் பாடல் - பெட்டிக்குள்ளே சுருளும் !

 

பாம்புக்கும் திரைப்படத்திற்கும் ஒப்புமை ! (தனிப்பாடல்.193)

------------------------------------------------------------------------------------

பாடல்களில் இரட்டுற மொழிதல் என்பது ஒருவகை. இதைச்சிலேடைஎன்றும் சொல்வார்கள். இரட்டுற மொழிதலில்  வல்லவர் காளமேகப் புலவர். சந்தக் கவிமணி தமிழழகனார் படைத்த ஒரு இரட்டுற மொழியும் பாடல் !

------------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள் ளேசுருளும்  பின்படமே தான்காட்டும் !

முட்டிக்கொண் டோடுவரே முன்பார்க்க - கொட்டகையில்

ஆடும்   இசையோடும்   ஆடும்போ   தேநகரும்,

பாடுந்   திரைப்படந்தான்   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள்ளே   சுருளும் !  பின், படமே காட்டும் !

முட்டிக் கொண்டு  ஓடுவரே முன் பார்க்க ! – கொட்டகையில்

ஆடும்  இசையோடும் ! ஆடும் போதே நகரும் !

பாடும்  திரைப்படம்தான்,   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

பாம்பு:

------------

பாம்பாட்டியின் பெட்டிக்குள் சுருண்டு படுத்திருக்கும்பெட்டியைத் திறந்தால் தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடும் ; பாம்பாட்டி வேடிக்கை காட்டுகிறார் என்றால் முட்டி மோதிக் கொண்டு மக்கள் விரைந்து ஓடுவார்கள் ;( கொட்டு அகையில் = பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடுகையில் ) பாம்பாட்டி தன் பெட்டியிலிருந்து பாம்பை எடுத்து வெளியே  விட்டால், மகுடி இசைக்கேற்ப அது ஆடும்அவ்வாறு ஆடும்போது அசைந்து அசைந்து நகர்ந்து ஆடும்  !

---------------------------------------------------------------------------------- 

திரைப்படம்:

--------------------

திரைப்படம் பெட்டிக்குள் சுருள் வடிவில் இருக்கும் ; அதை எடுத்து படப் பெருக்கியில் (PROJECTOR) இணைத்து இயக்கினால் திரையில் படத்தைக் காட்டும் ; படத்தை முன் வரிசை இருக்கையில் அமர்ந்து பார்ப்பதற்காக மக்கள் முட்டி மோதிக் கொண்டு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஓடுவார்கள் ; கொட்டகையில் உள்ள திரையில்  படம் ஆடும் (ஓடும்) ; அவ்வாறு ஓடுகையில் இசையும் அதனுடன் சேர்ந்துகொள்ளும் ; படம் ஓடும் போதே அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றாக நகரும்  !

 

ஆகையால் பாம்பும் திரைப்படமும் ஒன்றுக்கொன்று ஒப்புமையானது ஆகும் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

 -----------------------------------------------------------------------------------

 

 

மலர் (57) தமிழழகன் பாடல் - அப்பா ஒரு பச்சடி வை !


சந்தக் கவிமணி என்று பெயர் பெற்றவர் தமிழழகன். 1929 –ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் சண்முகசுந்தரம். இவரது தந்தையார் பெயர் வேலு. இவர் தமிழில் புலமை மிக்கவர். திரு.சண்முகசுந்தரம் தனது பத்தாம் அகவையில் தாயாரை இழந்துவிட்டார். எனவே சமையல் உள்பட அனைத்துப் பணிகளையும் தந்தையாரே கவனித்து வந்தார் !

ஒரு நாள், வேலுச் செட்டியார் தன் மகனைப் பார்த்து,” தம்பி ,இன்று என்ன கறி வைக்கலாம் என்று கேட்டார் . தமிழழகன் என்ன மறுமொழி சொல்லி இருப்பார் ? இதோ ! தந்தையின் வினாவுக்கு மகன் சொன்ன விடை ! (தனிப்பாடல்: 191)

---------------------------------------------------------------------------


அப்பா வொரு பச்சடிவை பருப்போடு

தப்பாமற் கத்தரிதான் கூட்டும்வை - அப்பளம்

தானும் பொரிமுருங்கை சாம்பாரும் சேர்த்துவை

நானும் மகிழ்ந் துண்பேன் நன்கு !


-------------------------------------------------------------------------

எளிய வெண்பா தான் ! உங்களுக்கே பொருள் புரியும் ! இருந்தாலும் பாடலின் பொருளையும் தொகுத்துத் தருகிறேன்!

-------------------------------------------------------------------------


அப்பா ! ஒரு பச்சடி வையுங்கள் ! பருப்பும் இருக்கட்டும் ! கத்தரிக்காய்க் கூட்டு வைத்திடுங்கள் ! அப்பளம் பொரித்து வையுங்கள் ! முருங்கைக் காய் சாம்பாரும் வேண்டும் ! இவையெல்லாம் செய்திடுங்கள் ! இன்றைய நண்பகல் உணவை மகிழ்ச்சியாகச் சுவைத்து உண்பேன் !

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கைவலைப்பூ.

[திருவள்ளுவராண்டு:2053, மடங்கல்( ஆவணி) 06]

{22-08-2022}

-------------------------------------------------------------------------

 

மலர் (56) புதிர்ப் பாடல் - நாகத்தை நாகத்தினாலே !


நாகம் என்னும் சொல்லுக்குத் தான் எத்துணைப் பொருள்கள் !


அந்த நாகத்தைக் கையில் ஏந்தி, நாம் சுவைக்க ,நல்ல பாடல் ஒன்றைத் தந்திருக்கிறார் பெயர் அறிய முடியாத ஒரு புலவர். எத்துணை வல்லமை ! எத்துணைத் தமிழ்ப் புலமை ! தனிப்பாடல் திரட்டு, பாடல்638.

-------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தி னாலே மறைத் தொருநங்கை நல்லாள்,

நாகத்தி லேறிமலர் கொய்யும்போ தொருநா கம்வந்து,

நாகத்தை நாகம்பிடித் துக்கொண் டேயொரு நாள்முழுதும்

நாகத்தை நாகம் அணுகக் கண் டேயஞ்சி நடுங்கினளே !


--------------------------------------------------------------------------

பொருள் புரிந்து கொள்ள வசதியாக, பாடலைச் சந்தி பிரித்துத் தந்திருக்கிறேன் ! படித்துப் பாருங்கள் !

--------------------------------------------------------------------------


நாகத்தை நாகத்தினாலே மறைத்து ஒருநங்கை நல்லாள்

நாகத்தில் ஏறி, மலர் கொய்யும் போது, ஒரு நாகம் வந்து,

நாகத்தை நாகம் பிடித்துக்கொண்டே ஒருநாள் முழுதும்,

நாகத்தை நாகம் அணுகக்கண்டே அஞ்சி நடுங்கினளே !


-------------------------------------------------------------------------

நாகம் சொற்பொருள் விளக்கம்:

------------------------------------------

நாகத்தை = நாகபடம் போன்ற தன் அரையை ; நாகத்தினாலே = சேலையினாலே ; நாகத்திலேறி = சுரபுன்னை மரத்தில் ஏறி ; ஒரு நாகம் வந்து = ஒரு நாகப் பாம்பு மரத்தின் கீழே வந்தது ; நாகத்தை நாகம் பிடித்துக் கொண்டு = அவள் சேலையைக் குரங்கு பற்றி இழுத்து ; நாகத்தை நாகம் அணுக = புன்னை மரம் இருக்கும் மலையை யானை அணுக

--------------------------------------------------------------------------

நாகபடம் போன்ற தன் அரையைப் புடவை உடுத்தி மறைத்துக் கொண்டு ஒரு பெண் மலர் கொய்ய மலையடிவாரச் சோலைக்குச் சென்றாள். அங்குள்ள சுரபுன்னை மரத்தில் ஏறி மலர்களைக் கொய்து கொண்டு இருக்கும் போது, மரத்தின் கீழே நாகப் பாம்பு ஒன்று ஊர்ந்து வந்தது. அதைப் பார்த்த ஒரு குரங்கு அவளருகில் வந்து அவளது ஆடையைப் பற்றி இழுத்துத் தன்னைப் பாம்பிடமிருந்து மறைத்துக் கொள்ள முயன்றது.

அப்பொழுது ஒரு யானை மலையோரமாக இருக்கும் அந்தச் சோலையிலுள்ள புன்னை மரம் அருகில் வந்தது. ஏற்கனவே பாம்பு, குரங்கு ஆகியவற்றால் அஞ்சி நடுங்கிய அவள் அந்த யானை புன்னைமரம் அருகில் வரக் கண்டதும் பதற்றமடைந்து மேனியெலாம் நடுநடுங்க அஞ்சினாள் ! அந்த நடுக்கம் ஒரு நாள் முழுதும் அவளைவிட்டு நீங்கவே இல்லை !

-------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

-----------------------------------------------------------------------

 

மலர் (55) புதிர்ப் பாடல் - முன்னிரண்டு எழுத்து நீங்கின் !

சாமி ஐயங்கார் என்பவர் எழுதிய ஒரு விடுகதைப் பாடல் ! படித்துப் புதிரை விடுவியுங்கள் பார்க்கலாம் ! (தனிப்பாடல்.132)

------------------------------------------------------------------------

முன்னிரண் டெழுத்து நீங்கின்

.....முத்தியீந் திடுமோ ரூராம் !

பின்னிரண் டெழுத்து நீங்கின்

.....பித்தனார் பத்தர் சொல்சொல்

மன்னிய ஒன்றும் மூன்றும்

.....மயிர்முடி இரண்டும் நான்கும்

உன்னிடிற் கூர்மை யாகும்

.....உரைமினிப் பாண்டி நாட்டூர் !

-----------------------------------------------------------------------

எளிய பாடல்தான் ! இருந்தாலும் சில சந்திகளைப் பிரித்து எழுதினால் தான் உங்களுக்குப் பொருள் விளங்கும்! இதோ சந்தி பிரித்த பாடல்:-

-----------------------------------------------------------------------

முன் இரண்டு எழுத்து நீங்கின்

.....முத்தி ஈந்திடும் ஓர் ஊராம் !

பின் இரண்டு எழுத்து நீங்கின்

.....பித்தனார் பத்தர் சொல்சொல் !

மன்னிய ஒன்றும் மூன்றும்

.....மயிர்முடி, இரண்டும் நான்கும்

உன்னிடில் கூர்மை ஆகும் !

.....உரைம் இனி பாண்டி நாட்டு ஊர் !

-----------------------------------------------------------------------

குறிப்பிட்ட ஒரு சொல்லில் முதலிரண்டு எழுத்துகளை நீக்கினால் பக்தர்களுக்குமுக்தி தரும் ஊரின் பெயராகும். பின் இரண்டு எழுத்துகளை நீக்கினால், சிவனடியார்கள் முணுமுணுக்கும் சொல் ஆகும். முதலெழுத்து மூன்றாம் எழுத்து இரண்டையும் சேர்த்தால் தலைமுடிஎன்பதைக் குறிக்கும் சொல் கிடைக்கும். இரண்டாம் எழுத்தையும் நான்காம் எழுத்தையும் சேர்த்தால் கூர்மைஎன்னும் பொருளைத் தரும் சொல் கிடைக்கும். எங்கே, சொல்லுங்கள் பார்க்கலாம் ! அது பாண்டிய நாட்டில் உள்ள ஒரு ஊரின் பெயர் !

------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி) 06]

{22-08-2022}

-------------------------------------------------------------------------

 

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

மலர் (54) புதிர்ப் பாடல் - மூன்றெழுத்தில் ஒரு சொல் !


சிற்றம்பலநாதன் என்று ஒரு புலவர் வாழ்ந்து வந்ததாக அவரது பாடல்களிலிருந்து அறிகிறோம். ஆனால் அவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைத்தில.

நம் வரலாற்றை நாமே எழுதி இணையத்தில் ஏற்றினால் தான், பிற்காலத்தில் நம்மைப் பற்றிய செய்திகள், விரும்பித் தேடுவோர்க்குக் கிடைக்கும். இல்லையேல், சிற்றம்பலநாதன் போன்றோரின் நிலை தான் நமக்கும் மேற்படும் !

புலவர் சிற்றம்பலநாதன் அவர்களின் ஒரு விடுகதைப் பாடல் ஒன்று உங்களுக்காக இதோ :-

------------------------------------------------------------------------------------


மூன்றெழுத்தி லோர்சொல் முதலிலையேல் மாதங்கம்

ஏன்றவிரண் டாவதிலை யேற்சம்பு - மூன்றாவ

தில்லையே லாகு மிகழவென வன்பர்காள்

சொல்லுகவி யாதோவச் சொல் !


-------------------------------------------------------------------------------------

எளிதில் புரிந்து கொள்ள வசதியாகச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

-------------------------------------------------------------------------------------


மூன்றெழுத்தில் ஓர் சொல், முதல் இ(ல்)லையேல் மாதங்கம் !

ஏன்ற இரண்டாவது இ(ல்)லையேல் சம்பு, - மூன்றாவது

இல்லையேல் ஆகும் இகழ, என அன்பர்காள்

சொல்லு கவி, யாதோ அச்சொல் ?


------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------

மூன்றெழுத்தில் ஓர் சொல் = மூன்று எழுத்துகளுடைய ஒரு சொல் ; முதல் இலையேல் = அச்சொல்லில் முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; மாதங்கம் = எஞ்சிய இரு எழுத்துகளும் சேர்ந்து யானைஎன்று பொருள் படும் ; ஏன்ற இரண்டாவது = அச்சொல்லில் உள்ள இரண்டாவது எழுத்து ; இலையேல்= இல்லாவிட்டால் ; சம்பு = நரி என்று பொருள்படும் ; மூன்றாவது இல்லையேல் = மூன்றாவது எழுத்தை நீக்கிவிட்டால் ; ஆகும் இகழ = இகழஎன்னும் பொருள்படும் ; என அன்பர்காள் சொல்லு கவி = என பாவல(ர்) அன்பர்கள் சொல்வார்கள் ; யாதோ அச் சொல் ? அந்தச் சொல் யாது ?

-----------------------------------------------------------------------------------

பாடலின் கருத்துரை:

-----------------------------

மூன்று எழுத்துகள் உள்ள ஒரு சொல் இருக்கிறது. அந்தச் சொல்லில் முதல் எழுத்தை நீக்கிவிட்டுப் படித்தால் யானைஎன்று பொருள் படும் ; இரண்டாவது எழுத்தை விட்டுவிட்டுப் படித்தால் நரிஎன்று பொருள் படும்; மூன்றாவது எழுத்தை விட்டுவிட்டுப் படித்தால் இகழ” (இகழ்ச்சி) என்று பொருள்படும்; அந்தச் சொல் என்ன என்று சொல்லுங்களேன் !

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி) 05]

{21-08-2022}

------------------------------------------------------------------------------------

 

மலர் (53) நற்றிணை - பொங்குதிரை பொருத வார்மணல் !

நெய்தல் நிலப் பரப்பில் ஒரு  காட்சி !


கடற்கரையோரம் பலவிதமான மரங்கள் வளர்ந்து உயர்ந்திருந்தன. அவற்றுளொன்று நாவல் மரம். நாவல் மரத்தில் பழங்கள் கருநீல நிறத்தில் உருண்டு திரண்டு பழுத்திருந்தன !

 

பழத்தை உண்பதற்கு ஓரிரு  பறவைகள் வந்து அமர்ந்த அசைவினாலா அல்லது மெல்லியதாய் வீசிய காற்றினாலா என்று தெரியவில்லை, ஒரு பெரிய நாவற்பழம் உதிர்ந்து கீழே விழுந்தது. இதை மரத்தின் கிளைகளில் அமர்ந்திருந்த வண்டுகள் பார்த்துவிடுகின்றன !

 

அந்தப் பழத்தை இன்னொரு வண்டு என்று நம்பிய வண்டுகள், நாவற்பழம் விழுந்த இடத்தில் வந்து சூழ்ந்துகொள்கின்றன !

 

அருகே ஈர மணற்பரப்பில் உலவிக் கொண்டிருந்தது நண்டு ஒன்று. அது கருவண்டுகளைப் பழம் என்று எண்ணிக் கவ்வ முற்பட்டது. நண்டைப் பார்த்ததும் வண்டுகள் ஊங்காரமிட்டுக் உலவத் தொடங்கின !

 

கடற்கரை ஓரம் மீனுக்காகக் கவனமாகக் காத்திருந்த நாரை, இதைப் பார்த்துவிட்டு, அங்கு ஏதோ சண்டை நடக்கிறது, நாம் போய் இணக்கமாகப் பேசித் தீர்த்து வைப்போம் என்று கிளம்பியது !

 

காற்றில் பழம் விழுவது இயற்கை. வண்டுகள் பழமரத்தைச் சுற்றிப் பறப்பதும் இயற்கை. கடற்கரையோரம், நண்டு, நாரைகள் காணப்படுவதும் இயற்கை. இம்மூன்றையும் இணைத்து அழகான பாடலாகப் படைத்திருக்கிறார் அம்மூவனார் என்னும் ஆன்ற தமிழ்ப் புலவர் ! இதோ அந்தப் பாடல்:-

------------------------------------------------------------------------------------

 

பொங்குதிரை பொருத வார்மண லடைகரைப்

புன்கால் நாவற் பொதிப்புற இருங்கனி

கிளை செத்து மொய்த்த தும்பி பழஞ்சொத்துப்

பல்கால் அலவன் கொண்ட கோள் கூர்ந்து

கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்

இரைதேர் நாரை எய்தி விடுக்கும் ! (நற்.35)

 

-------------------------------------------------------------------------------------

அருஞ்சொற்பொருள்:

---------------------------------------

பொங்கு திரை = பொங்கி வரும் அலைகள்

பொருத = வந்து மோத

வார்மணல் அடைகரை = மணல் படிந்த கரையில்

புன்கால் = மெல்லிய காம்பு

இருங்கனி = பெரிய பழம்

கிளை செத்து மொய்த்த தும்பி = காய்ந்த கிளைகளில் அமர்ந்திருந்த வண்டுகள்

பல்கால் அலவன் = பல கால்களை உடைய நண்டு

கொள்ளா நரம்பின் = இசைகருவியின் நரம்பிலிருந்து எழுகின்ற

இமிரும் பூசல் = வண்டுகளின் ஊங்கார ஒலியைக் கேட்டு ஏதோ சண்டை நடப்பதாக எண்ணி,

இரைதேர் நாரை = மீனுக்காக காத்திருக்கும் நாரை,

எண்ணி விடுக்கும் = எண்ணிக்கொண்டு அந்த இடத்தை நோக்கிக் கிளம்பியது.

 

-------------------------------------------------------------------------------------

கருத்துரை:

-----------------------

அலைகள் திரும்பத் திரும்ப  வந்து மோதி, கடற்கரையோரம் பரந்து விரிந்து திரண்ட மணற் பரப்பை உருவாக்கியிருந்தது. அங்கு  ஓங்கி வளர்ந்திருந்த நாவல் மரத்தில் நிரம்பவும் பழங்கள் பழுத்திருந்தன. அந்த மரத்திலிருந்து கருநீல நிறம் கொண்ட பெரிய நாவற்பழம் ஒன்று உதிர்ந்து மணலில் விழுந்தது. நாவல் மரத்தின் காய்ந்த கிளையிலிருந்து அதைக் கண்ணுற்ற வண்டுகள் நாவற்பழத்தை இன்னொரு வண்டு என்று நினைத்து அங்கிருந்து பறந்து வந்து நாவற்பழம் விழுந்த இடத்தில்  சூழ்ந்துகொள்கின்றன !

 

அருகே ஈர மணற்பரப்பில் உலவிக் கொண்டிருந்தது நண்டு ஒன்று. அது கருவண்டுகளை நாவற்பழம் என்று எண்ணி அவற்றைக் கவ்வ முற்பட்டது. நண்டைப் பார்த்ததும் வண்டுகள் ஊங்கார ஒலி எழுப்பத்  தொடங்கின !

 

கடற்கரை ஓரம் மீனுக்காகக் கவனமாகக் காத்திருந்த நாரை ஒன்று இதைப் பார்த்துவிட்டு, அங்கு ஏதோ சண்டை நடக்கிறது, நாம் போய் இணக்கமாகப் பேசித் தீர்த்து வைப்போம் என்று கிளம்பியது !


நற்றிணையில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு அகப்பொருளாக வேறொரு கருத்து உண்டு. அது தலைவன் தலைவியைப் பற்றியது !


எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான 'நற்றிணை', 9 அடிச் சிற்றெல்லையும், 12 அடி பேரெல்லையும் உடையது. 400 பாடல்களைக் கொண்டது பல புலவர்களால் பாடப்பட்டது. அகப்பொருளைக் கொண்டது. நற்றிணை நானூறு என்றும் இதற்குப் பெயருண்டு !

 

பன்னாடு தந்த மாறன் வழுதி இந்நூலை தொகுத்தார். நற்றிணைப் பாடல்கள் அக்காலத் தமிழர்களின் ஒழுகலாற்றை   அறியத்  துணை புரிகின்றன !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்ப்பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 30]

{15-08-2022}

--------------------------------------------------------------------------------------