புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூன், 2022

மலர் (24) வீரராகவர் பாடல் - ஏடாயிரம் கோடி எழுதாது !

அந்தகக்கவி வீரராகவர் வேண்டிய பொருள் தான் யாது?

 

அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்னும் புலவர் காஞ்சிபுரத்தை அடுத்த பொன் விளைந்த களத்தூரில் பிறந்தவர். பிறவியிலேயே கண் பார்வை அற்ற அவர் தமது அயராத முயற்சியால் தமிழ் கற்றுப் புலவரானவர். திருக்கழுகுன்ற புராணம், சந்திரவாணன் கோவை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.


----------------------------------------------------------------------------------

 

ஒருமுறை வீரராகவர் "தாகம் தீர்த்த செழியதரையன்' என்ற குறுநில மன்னனுக்குத்  தூக்குக்கவி (கவிதை வடிவக் கடிதம்) ஒன்றை அனுப்புகிறார். அந்தத் தூக்குக் கவி எப்படித் தொடங்குகிறது தெரியுமா ?

 

கோடி கோடியாய்  ஏடுகள் பலவற்றில் எழுதிப் படிக்காமல் அனைத்தையும் நெஞ்சத்திலேயே மனனம் செய்து இருத்திக் கற்ற வல்லவனும்,  எப்பொருளைப் பற்றி யார் கேட்பினும் அப்பொருளின் நுட்பம் உரைத்திடும் ஆற்றல் மிக்கவனுமாகிய வீரராகவன் என்னும் இந்தப் புலவன் விடுக்கும் தூக்கோலையை, ஆதிசேடனே சிரமசைத்துப் போற்றும் கலைகளின் அதிபதியும், கங்கைகுலத் தலைவனும், சேலம் மற்றும் தென்திசையில் உள்ள பாலைக்காடு (பாலக்காடு) ஆகிய இடங்களில் குறுநில மன்னர்களை வெற்றி கொண்டவனும் ஆகிய தாகம் தீர்த்த செழியன்காண்க !

 

சரி ! தூக்குக் கவியில் வீரராக முதலியார் அப்படி என்னதான் கேட்டிருந்தார் ?

 

----------------------------------------------------------------------------------

 

ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகன்,

 

எதுகொடுப்பினும் அதுவே எனச்சொலும் கவிவீர

ராகவன் விடுக்கும் ஓலை !

 

சேடாதிபன், சிரமசைக்கும் கலாகரன்

திரிபதகை குல சேகரன்,

 

தென்பாலை சேலம் செயித்த, தாகந்தீர்த்த

செழியன் எதிர்கொண்டு காண்க  !

 

பாடாத கந்தருவம், எறியாத கந்துகம்,

பத்தி கோணாத கோணம்,

 

பறவாத கொக்கு, அனல் பண்ணாத கோடை,வெம்

படையாய்த் தொடாத குந்தம்,

 

சூடாத பாடலம், பூவாத மா, தொடை

தொகுத்து முடியாத சடிலம்,

 

சொன்னசொல் சொல்லாத கிள்ளை, ஒனிறெங்கும்

துதிக்க வர விடவேணுமே''

 

 ----------------------------------------------------------------------------------

 அருஞ்சொற்பொருள்:

 --------------------------------------

 

விரகன் = கூர்மதியாளன் ;  சேடாதிபன் = மக்கள் தலைவன் ;   திரிபதகை = கங்கை ; குலசேகரன் = குலத்தவன் ; தென்பாலை = தென் திசையிலுள்ள பாலக்காடு ; ஒன்று + எங்கும் = ஒனிறெங்கும்.

 

-----------------------------------------------------------------------------------

 

அந்தத் தூக்குக்கவியில் பறக்காத கொக்கு ஒன்றினைத் தனக்குப் பரிசாகத் தரவேண்டும் என்று வேண்டினார். அதுமட்டுமா ? இன்னும் பலவற்றையும் கேட்கிறார். அவை யாவை ? பார்ப்போமா ?

 

இசைக்காத இசை, எறிந்து விளையாடாத பந்து, கோணல் அற்ற மூலை, வெப்பம் இல்லாத  கோடைக்காலம், ஊறு செய்யாத குந்தம் என்னும் படைக்கருவி,  காலில் அணிய முடியாத பாதுகை, பூக்காத மாமரம், தொகுத்துப் பின்னலிடாத சடை, சொன்னதைச் சொல்லாத கிளிப்பிள்ளை ஆகியவற்றையும் எனக்கு  அனுப்புக'' என்று கேட்டிருந்தார் !

 

இயற்கைக்கும் இயல்புக்கும் மாறான இத்தனையும் ஏன் புலவர் கேட்டார்? கட்புலன் அற்ற அப்புலவருக்கு, காடும் மேடும் திரிந்து பரிசில் பெற்று வாழ்பவருக்கு இயல்புக்கு மாறான இத்தனை பொருள்களும் ஏன் தேவைப்பட்டன ?

 

புலவர் பலவாறாய்க் கேட்டாலும் அவை அனைத்தும் ஒன்றையே குறிக்கும். அவர் வேண்டியது எளிதில் பயணப்பட ஒரு குதிரை. அவ்வளவுதான் !

 

-----------------------------------------------------------------------------------

 

பாடாத கந்தருவம் = இசைக்காத கந்தருவ இசை, (அதாவது கந்தருவம் எனப்படும் குதிரை).

 

எறியாத கந்துகம் = எறிந்து விளையாட உதவாத பந்து, (அதாவது கந்துகம் எனப்படும் குதிரை)

 

பத்தி கோணாத கோணம் = கோடு மடங்காத மூலை மடக்குக் கோணம் (Angle), (அதாவது கோணம் எனப்படும் குதிரை),

 

பறவாத கொக்கு = பறந்து செல்ல முடியாத கொக்கு, (அதாவது கொக்கு எனப்படும் குதிரை),

 

அனல் பண்ணாத கோடை = வெப்பம் இல்லாத  கோடைக் காலம், (அதாவது கோடை எனப்படும் குதிரை),

 

வெம்படையாய்த் தொடாத குந்தம் = தாக்கிக் காயப்படுத்தாத குந்தம் என்னும் போர்க்கருவி, (அதாவது குந்தம் எனப்படும் குதிரை),

 

சூடாத பாடலம் =  யாரும் அணியாத மிதியடி, (அதாவது பாடலம் எனப்படும் குதிரை,

 

பூவாத மா = பூக்காத மாமரம், (அதாவது மா எனப்படும் குதிரை)

 

தொடை தொகுத்து முடியாத சடிலம் = பின்னப்படாத சடை, (அதாவது சடிலம் எனப்படும் குதிரை),

 

சொன்னசொல் சொல்லாத கிள்ளை = சொன்னதைத் திருப்பிச் சொல்லாத கிளி, (அதாவது கிள்ளை எனப்படும் குதிரை),

 

குதிரையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்தாம் எத்துணை எத்துணை ! [கந்தருவம் = கானம், குதிரை]  [கந்துகம் = பந்து, குதிரை] [கோணம் = மூலை, குதிரை]   [கொக்கு = பறவை, குதிரை]  [கோடை = கோடைக்காலம், குதிரை] [குந்தம் = போர்க்கருவி, குதிரை]  [பாடலம் = மிதியடி,  குதிரை]  [மா = மாமரம், குதிரை]  [சடிலம் = சடை, குதிரை]  [ கிள்ளை = கிளி, குதிரை]

 

குதிரைஒன்று தனக்கு வேண்டும் என்று கேட்கும் வீரராகவர், தன் கருத்தைப் பாடல் வடிவில், திகைக்க வைக்கும் கருத்துடைய சொற்களைப் பெய்து தூக்குக் கவி வடித்திருக்கும் பாங்கினை எண்ண எண்ண வியப்புத்தான் மேலிடுகிறது !

 

கண்பார்வை இல்லாத ஒரு மனிதர் இணையற்ற திறமைகள் படைத்த தமிழ்ப் புலவராக சில நூற்றாண்டுகள் முன்பு விளங்கி இருக்கிறார் ! இரண்டு கண்களிலும் பார்வைப் புலன் படைத்திருக்கும் நாம் தமிழில் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா ? எண்ணிப் பாருங்கள் !

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

------------------------------------------------------------------------------------



மலர் (23) வீரராகவர் பாடல் - சீராடையற்ற வைரவன் வாகனம் !

கட்டுச் சோற்றை நாய் கவ்விக் கொண்டு போயிற்றே !


அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு பிறப்பிலேயே கண்பார்வை இல்லாமற் போயிற்று. கண்பார்வை இல்லாவிட்டாலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி அனைவரும் விதந்து போற்றும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞர் தொண்டைமண்டலத்தில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். அவரது அரிய பாடல் ஒன்றைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------

பாடல்:

--------------------------------------------------------------------------------

 

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே!

---------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------

 

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து,

பார் ஆரும் நான்முகன் வானம் தன்னை முன்பற்றிக் கௌவி

நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே !

 

---------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------------------------------------------------------------

 

சீராடை = அணியும் ஆடை ; அற்ற = இல்லாத ; வைரவன் வாகனம் = வைரவனின் வாகனமாகிய நாய் ஒன்று ; சேரவந்து = அருகில் வந்து ; பாராரும் = நிலத்திலிருந்த (அதாவது என் அருகில் தரையில் வைக்கப்பட்டிருந்த) ; நான்முகன் வாகனம் தன்னை = நான்முகக் கடவுளின் வாகனமாகிய அன்னத்தை (அன்னம் = சோறு - அதாவது சோற்றினை கட்டுச் சோற்று மூட்டையினை)

 

முன்பற்றிக் கௌவி = வாயில் கௌவிக் கொண்டு ; நாராயணன் உயர் வாகனம் = கருடன் (அதாவது கருடனைப் போல்) ஆயிற்று = விரைந்து சென்று விட்டது) ; நம்மை முகம் பாரான் = பசியால் வாடியிருக்கும் நம் (என்) முகத்தை பாராமல் - இரக்கமில்லாமல்; மை வாகனன் = (மை எனப்படும்) ஆட்டினை வாகனமாகக் கொண்டிருக்கும் அக்னி பகவான் (அதாவது பசி என்னும் நெருப்பு); வந்தே வயிற்றில் பற்றினனே = வயிற்றில் பற்றிக் கொண்டது.

 

---------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------

 

கட்டுச் சோற்று மூட்டையினை என்னருகில் தரையில் வைத்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று சோற்று மூட்டையைக் கவ்விக் கொண்டு கருடன் போல விரைந்து ஓடிவிட்டது. என் வயிற்றில் பசி என்னும் தீ பற்றிக் கொண்டு என்னை வாட்டுகிறது !

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

------------------------------------------------------------------------------------



மலர் (22) வீரராகவர் பாடல் - மாலே நிகராகும் சந்திரவாணன் !

சந்திரவாணன் நாட்டில் தேன்மாரி பெய்கிறதாம் !

 

பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர் என்பதால் அந்தகக் கவிஎன்னும் அடைமொழி பெற்றவர் வீரராகவ முதலியார். அந்தகம்என்னும் வடமொழிச் சொல்லுக்கு பார்வை யின்மை என்று பொருள். பார்வையை இழந்து விட்டாலும் படிப்புத் திறனை அவர் இழந்து விடவில்லை !

 

தமிழைத் துளக்கமறக் கற்று   தமிழ்ப் புலமை அடைந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் !இவருடைய பாடல்கள் சொற்சுவையும் பொருள் நயமும் உடையவை. ஒருமுறை இவர் சந்திரவாணன் என்பவர் மீது கோவை பாடிக்கொண்டிருந்தார் !

-----------------------------------------------------------------------------------

அவர் பாடிய கோவைச் செய்யுள் வருமாறு:-

-----------------------------------------------------------------------------------

 

மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே

பாலே ரிபாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண்

டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன்

மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே !

 

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

 

மாலே நிகராகும் சந்திரவாணன் வரை இடத்தே !

பால் ஏரி பாயச் செந்தேன் மாரி பெய்ய நற்பாகு கற்கண்டாலே !

எருவிட முப்பழச் சாற்றின் அமுத வயல் மேலே முளைத்த

கரும்போ இம் மங்கைக்கு மெய் எங்குமே !

 

-----------------------------------------------------------------------------------

 

இந்தச் செய்யுளை வீரராகவர் தன் மாணவனுக்குச் சொல்லி அவரை ஏட்டில் எழுதப் பணித்தார். அதனைக் கேட்டுக்கொண்டிருந்த திருப்பனையங்காட்டைச் சேர்ந்த அம்மைச்சி என்னும் மங்கை நல்லாள் கவிராயருக்குக் கண்தான் கெட்டது மதியும் கெட்டதோ? கரும்பு சேற்றில் முளைக்காது என்பது தெரியவில்லையேஎனச் சொன்னார் !

 

இதனைச் செவிமடுத்த புலவர் அம்மங்கையின் கூற்றை ஆய்ந்து அவள் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்து தன் மாணவனிடம் கொம்பை வெட்டி காலை நடுஎன்றார். மாணவரும் அதனைத் தெரிந்து கொண்டு சேற்றின் என்பதனைச் சாற்றின் என மாற்றம் செய்து படித்தார். கேட்டுக் கொண்டிருந்த புலவர் பெருமக்கள் யாவரும் மிக்க களிப்பெய்தனர் !

----------------------------------------------------------------------------------

பாடலின் பொருள்:

-----------------------------------

 

திருமாலைப் போன்று புகழ் பெற்று விளங்கும் சந்திரவாணன் ஆள்கின்ற நாட்டில் ஏரிகளில் இருந்து  பால் பெருக்கெடுத்துப் பாய்ந்து வயல்கள் எல்லாம் செழித்து விளங்க, வானிலிருந்து செந்தேன் மாரியாகப் பொழிகிறது !

 

கற்கண்டுப் பாகு  வயல்களுக்கு எருவாகிட அவ்வயல்களில் முக்கனிச் சாறு தேங்கி நிற்க  அச்சாற்றில் விளைந்த கரும்பின் சுவையை ஒத்திருக்கிறது இம்மங்கையின் மேனி !

 

-----------------------------------------------------------------------------------

கொம்பை வெட்டிக் காலை நடு:

-----------------------------------------------------------------------------------

 

இதன் பொருள் என்ன ? ”முக்கனிச் சேற்றின் அமுத வயல்என்று புலவர் முன்னதாகச் சொன்னார். அம்மைச்சி என்னும் மங்கை கரும்பு சேற்றில் முளைக்காதுஎன்றதும் புலவர் சேற்றில்என்பதில் வரும் கொம்பை (இரட்டைச் சுழி) வெட்டிவிட்டு, காலை நடு என்றார். அதாவது சேற்றில் என்பதை  சாற்றில்என்று மாற்றியமைத்தார் புலவர் !

 

குழுமியிருந்த அவைக்களப் புலவர்கள் யாவரும் வீரராகவரின் கவித்திறத்தை விதந்து பாராட்டினர்; நெஞ்சார வாழ்த்தினர் !

 

இப்படி ஓர் அருமையான பாடலைப் பாடிய கவிராயர், பாடலைக் கேட்க வந்த மங்கை சொன்ன திருத்தத்தையும் ஏற்றுச் செயல்பட்டது அவரது பணிவையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது !

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com))

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

--------------------------------------------------------------------------------



திங்கள், 27 ஜூன், 2022

மலர் (21) வீரராகவர் பாடல் - முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக !

அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன் மனைவியுடன் உரையாடுவது போல் காட்சியை அமைத்து எழுதியது இந்தப் பாடல் !


வாழ்க்கையே நிலையில்லாதது. அதிலும் ஒவ்வொரு பருவமும் நிலையின்றி மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. மாறிவரும் வாழ்க்கைப் பருவங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்தப் பாடல் !

 

-----------------------------------------------------------------------------------

 

முன்னா ளிருவர்க்கும் யாக்கை யொன்றாக முயங்கினமால்

பின்னாட் பிரியன் பிரியை யென்றாயினம் பேசலுறும்

இந்நாட் கொழுநன் மனைவி யென்றாயின மின்னமுமோர்

சின்னாளி லெப்படியோ வையநீயின்று செப்புகவே.

 

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

 

முன்னாள் இருவர்க்கும் யாக்கை ஒன்றாக முயங்கினம் ஆல்

பின்னாள் பிரியன் பிரியை என்று ஆயினம் பேசல் உறும்

இந்நாள் கொழுநன் மனைவி என்று ஆயினம் இன்னமும் ஓர்

சின்னாளில் எப்படியோ ஐய நீ இன்று செப்புகவே !

 

-----------------------------------------------------------------------------------

பொருளுரை:

-----------------------

 

முன்பு களவொழுக்கம் பூண்டிருந்த காலத்தில் (முன்னாளில்) ஒருவருக்குள் ஒருவராக நம் உடம்பைப் புகுத்திக்கொண்டு ஓருடம்பாய்க் கிடந்தோம். பின்னர்  காதலன் என்றும் காதலி என்றும் ஆனோம். இப்போது கணவன் மனைவி என்று வாழ்கிறோம். சில நாள்களுக்குப் பிறகு (நம்மில் ஒருவர் காலமானால்)  எப்படி இருப்போமோ ?

 

-----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

------------------------

 

முன்னாள் = பிறருக்குத் தெரியாமல் மறைந்து மறைந்து பழகிய களவொழுக்கக் காலத்தில் ; இருவர்க்கும் யாக்கை ஒன்றாக = ஓருடல் ஈருயிராக ; முயங்கினமால் = இணைந்து கிடந்தோம் ; பின்னாள் = அதற்குப் பிந்திய காலத்தில் ; பிரியன் பிரியை என்று ஆயினம் = காதலன் காதலி என்று நம்மை ஊருக்கு வெளிப்படுத்திக் கொண்டு வாழ்ந்தோம் ;

 

பேசலுறும் இந்நாள் = இப்பொழுது ; கொழுநன் மனைவி என்றாயினம் = திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருகிறோம் ; இன்னமுமோர் சின்னாளில் = இன்னும் சிறிது காலம் சென்ற பிறகு ; எப்படியோ = நம்மில் ஒருவர் மறைந்த பிறகு என்னவாகுமோ ? ; ஐய நீ இன்று செப்புகவே = என் மனைவியே நீ செப்புவாயாக !


----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 13]

{27-06-2022}

---------------------------------------------------------------------------------



புதன், 22 ஜூன், 2022

மலர் (20) வீரராகவர் பாடல் - வாழுமிலங்கைக் கோமானில்லை !

தம்பிக்கு எதிராக கைகளில் வில்லை ஏந்திடலாமா ?

 --------------------------------------------------------------------------------


சீர்காழிப் பகுதியை ஆண்ட சிற்றரசன் அபிராமன். அவனுடைய தம்பி, அபிராமனுக்கு எதிராகச் செயல்பட்டதால், அவனுடன் போரிட்டு அவனை அடக்க எண்ணி, கையில் வில் அம்புகளுடன் போர்க்களம் புக முற்பட்டான் அபிராமன் !


இதைக் கேள்விப்பட்ட வீரராகவர், அபிராமனிடம் சென்று பரதனுக்கு எதிராக இராமன் போர் தொடுத்ததில்லை. அபிராமன் தன் தம்பிக்கு எதிராக வில்லைக் கையில் எடுக்கலாமா என்று சொன்ன நல்லுரை அபிராமனின் போர் முடிவைக் கைவிடச் செய்தது !

 

சிற்றரசன்  அபிராமனை இராமாயணக் கதை இராமனோடு ஒப்பிட்டு வீரராகவர் பாடிய பாடல் இதோ:

---------------------------------------------------------------------------------

 

வாழுமிலங்கைக் கோமானில்லை, மானில்லை !

ஏழுமரா மரமோ வீங்கில்லை - ஆழி

அலையடைத்த செங்கை யபிராமா வின்று

சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.

 

 ---------------------------------------------------------------------------------

பொருளுரை:

------------------------

 

(அபி) ராமா ! நீ இலங்கைக் கோமான் இராவணனும் இல்லை; மாய மானை அனுப்பி சீதாபிராட்டியை ஏமாற்றியவனும் இல்லை; ஏழு மரா மரங்களுக்குப் பின்புறம் ஒளிந்திருந்து அம்பு விட்டு வாலியைக் கொன்றவனும் இல்லை ! நீ இராமனில்லை;  உன் பெயர் அபிராமன். சீர்காழி நகருக்குள் கடல் அலை பெருகி வந்தமையால், அதைத் தடுக,  தடுப்புச் சுவர் அமைத்து மக்களைக் காத்தவன் நீ ! அத்தகைய மாட்சிமை பொருந்திய நீ உன் தம்பிக்கு எதிராக  உன் கைகளில்  சிலையை (வில்) எடுக்கலாமா ? சொல் !

 

----------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

----------------------

 

வாழும் இலங்கைக் கோமான் இல்லை = இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நீ இராவணனுமில்லை  ; மானில்லை = மாயமானை அனுப்பி யாரையும் ஏமாற்றியவனும் இல்லை ; ஏழு மரா மரமோ ஈங்கு இல்லை = ஏழு மரா மரங்களும் இங்கு இல்லை ; ஆழி அலை அடைத்த = கடல் அலைகள் பெருகி வந்த போது அதற்குத் தடுப்புச் சுவர் எழுப்பி காப்புச் செய்த நீ (இராமாயணக் காலத்து இராமனில்லை; இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் அபிராமன்)  ; செங்கை அபிராமா = சிவந்த கைகளையுடைய அபிராமா ; இன்று = இத்தகைய மாண்புடைய நீ இப்பொழுது ; சிலை எடுத்த ஆறு = தம்பிக்கு எதிராக உன் கைகளில் வில்லை ஏந்தியது ஏன் ; எமக்குச் செப்பு = எனக்குச் சொல்வாயாக !

 

--------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

“திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 08]

{22-06-2022}

------------------------------------------------------------------------------------



செவ்வாய், 21 ஜூன், 2022

மலர் (19) வீரராகவர் பாடல் - செஞ்சுடரின் மைந்தனையும் !

பரதனையும் இராமனையும் பார் !


--------------------------------------------------------------------------------


சீகை எனப்படும் சீர்காழியில் வாழ்ந்து வந்த ஒரு சிற்றரசன் இராமன்இவரது முழுப்பெயர் அபிராமன்இவருடைய தம்பி இவருக்கு எதிராகச் செயல்பட்டதால் தம்பி மீது போர் தொடுக்க எண்ணிக் கிளர்ந்தெழுந்தார் அபிராமன் !

 

இதைக் கேள்விப்பட்ட வீரராகவர் அபிராமனிடம் சென்றுவில் வீரர்களான  கன்னன் (சூரியனின் மகன்)இராவணன்அருச்சுணன் ஆகியோரை நினைத்துக்கொண்டு வில்லைக் கையில் எடுக்காதே !

 

பரதனுக்கு நாட்டைத் தந்த இராமனையும்இராமன் பாதுகையை அரியணை ஏற்றி வைத்துக்கொண்டு நாடாண்ட பரதனையும் எண்ணிப்பார். தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக என்று அபிராமனிடம் எடுத்துச் சொன்னார் !

 

மனம் தெளிவடைந்த அபிராமன் தம்பி மீது போர் தொடுக்கும் திட்டத்தைக் கைவிட்டார் வீர்ராகவர் தனது கருத்தை ஒரு வெண்பா மூலம் அபிராமனுக்குத் தெரிவித்தார்.

 

--------------------------------------------------------------------------------

இதோ அந்த வெண்பா !

--------------------------------------------------------------------------------

 

 

செஞ்சுடரின் மைந்தனையுந் தென்னிலங்கை வேந்தனையும்

பஞ்சவரிற் பார்த்தனையும் பாராதே – விஞ்சு

விரதமே பூண்டிந்த மேதினியை யாண்ட

பரதனையும் ராமனையும் பார்.

 

----------------------------------------------------------------------------------

  சந்தி பிரித்து எழுதிய பாடல்:

----------------------------------------------------------------------------------

 

செஞ்சுடரின் மைந்தனையும் தென் இலங்கை வேந்தனையும்

பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே – விஞ்சு

விரதமே பூண்டு இந்த மேதினியை ஆண்ட

பரதனையும் இராமனையும் பார் !

 

---------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------

 

அபிராமா ! சிறந்த வில் வீரர்களான சூரியதேவனின் மைந்தனாகிய கர்ணனாகவும், இலங்கை மன்னனாகிய இராவணனாகவும், பாண்டவர்களில் ஒருவனான அருச்சுனனாகவும் உன்னை  எண்ணிக்கொண்டு உன் தம்பிக்கு எதிராகப் போர் புரிய வில்லினை எடுக்காதே !

 

நாடாளும் உரிமையைப் பரதனுக்கு விட்டுக் கொடுத்த இராமனையும்அண்ணன் இருக்கையில் தான் அரியணையில் அமர்வதா  என்று கூறி அண்ணனின் மிதியடிகளை அரசனின் இருக்கையில் வைத்துஅண்ணன் சார்பாக ஆட்சியைக் கவனித்த பரதனையும் எண்ணிப்பார் !

 

பெருந்தன்மையாக நடந்துகொள்வதில் தான் ஒரு அரசனின் மாட்சிமை உலகிற்கு வெளிப்படும்எனவே உன் தம்பி மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிடுவாயாக !

 

---------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------------------------------------------------------------


செஞ்சுடர் = சூரியன்மைந்தன் = மகன்தென்னிலங்கை = தெற்கில் உள்ள இலங்கை நாடுவேந்தனையும்இராவணனையும்பஞ்சவரில் = பஞ்ச பாண்டவரில் ; பார்த்தனையும் = அருச்சுனனையும் ; பாராதே = உன்னை அவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காதேவிரதமே பூண்டு = மனத்தில் உறுதி ஏற்று ; மேதினி = நாட்டை ;

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 17]

{30-04-2022}

---------------------------------------------------------------------------------

கன்னன்