புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூன், 2022

மலர் (23) வீரராகவர் பாடல் - சீராடையற்ற வைரவன் வாகனம் !

கட்டுச் சோற்றை நாய் கவ்விக் கொண்டு போயிற்றே !


அந்தகக்கவி வீரராகவ முதலியாருக்கு பிறப்பிலேயே கண்பார்வை இல்லாமற் போயிற்று. கண்பார்வை இல்லாவிட்டாலும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி அனைவரும் விதந்து போற்றும் பெரும் கவிஞராகத் திகழ்ந்தார். 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தக் கவிஞர் தொண்டைமண்டலத்தில் காஞ்சிபுரம் அருகிலுள்ள பூதூரில் பிறந்தவர். அவரது அரிய பாடல் ஒன்றைப் பார்ப்போமா !

--------------------------------------------------------------------------------

பாடல்:

--------------------------------------------------------------------------------

 

சீராடை யற்ற வைரவன் வாகனஞ் சேரவந்து

பாராரு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கௌவி

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மைமுகம்

பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே!

---------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

---------------------------------------------------------------------------------

 

சீராடை அற்ற வைரவன் வாகனம் சேர வந்து,

பார் ஆரும் நான்முகன் வானம் தன்னை முன்பற்றிக் கௌவி

நாராயணன் உயர் வாகனம் ஆயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினில் பற்றினனே !

 

---------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

--------------------------------------------------------------------------------

 

சீராடை = அணியும் ஆடை ; அற்ற = இல்லாத ; வைரவன் வாகனம் = வைரவனின் வாகனமாகிய நாய் ஒன்று ; சேரவந்து = அருகில் வந்து ; பாராரும் = நிலத்திலிருந்த (அதாவது என் அருகில் தரையில் வைக்கப்பட்டிருந்த) ; நான்முகன் வாகனம் தன்னை = நான்முகக் கடவுளின் வாகனமாகிய அன்னத்தை (அன்னம் = சோறு - அதாவது சோற்றினை கட்டுச் சோற்று மூட்டையினை)

 

முன்பற்றிக் கௌவி = வாயில் கௌவிக் கொண்டு ; நாராயணன் உயர் வாகனம் = கருடன் (அதாவது கருடனைப் போல்) ஆயிற்று = விரைந்து சென்று விட்டது) ; நம்மை முகம் பாரான் = பசியால் வாடியிருக்கும் நம் (என்) முகத்தை பாராமல் - இரக்கமில்லாமல்; மை வாகனன் = (மை எனப்படும்) ஆட்டினை வாகனமாகக் கொண்டிருக்கும் அக்னி பகவான் (அதாவது பசி என்னும் நெருப்பு); வந்தே வயிற்றில் பற்றினனே = வயிற்றில் பற்றிக் கொண்டது.

 

---------------------------------------------------------------------------------

பொருளுரை:

---------------------------------------------------------------------------------

 

கட்டுச் சோற்று மூட்டையினை என்னருகில் தரையில் வைத்துவிட்டு ஓய்வாகப் படுத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று சோற்று மூட்டையைக் கவ்விக் கொண்டு கருடன் போல விரைந்து ஓடிவிட்டது. என் வயிற்றில் பசி என்னும் தீ பற்றிக் கொண்டு என்னை வாட்டுகிறது !

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 14]

{28-06-2022}

------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக