புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

மலர் (54) புதிர்ப் பாடல் - மூன்றெழுத்தில் ஒரு சொல் !


சிற்றம்பலநாதன் என்று ஒரு புலவர் வாழ்ந்து வந்ததாக அவரது பாடல்களிலிருந்து அறிகிறோம். ஆனால் அவரைப் பற்றிய பிற விவரங்கள் ஏதும் கிடைத்தில.

நம் வரலாற்றை நாமே எழுதி இணையத்தில் ஏற்றினால் தான், பிற்காலத்தில் நம்மைப் பற்றிய செய்திகள், விரும்பித் தேடுவோர்க்குக் கிடைக்கும். இல்லையேல், சிற்றம்பலநாதன் போன்றோரின் நிலை தான் நமக்கும் மேற்படும் !

புலவர் சிற்றம்பலநாதன் அவர்களின் ஒரு விடுகதைப் பாடல் ஒன்று உங்களுக்காக இதோ :-

------------------------------------------------------------------------------------


மூன்றெழுத்தி லோர்சொல் முதலிலையேல் மாதங்கம்

ஏன்றவிரண் டாவதிலை யேற்சம்பு - மூன்றாவ

தில்லையே லாகு மிகழவென வன்பர்காள்

சொல்லுகவி யாதோவச் சொல் !


-------------------------------------------------------------------------------------

எளிதில் புரிந்து கொள்ள வசதியாகச் சந்தி பிரித்துத் தருகிறேன் !

-------------------------------------------------------------------------------------


மூன்றெழுத்தில் ஓர் சொல், முதல் இ(ல்)லையேல் மாதங்கம் !

ஏன்ற இரண்டாவது இ(ல்)லையேல் சம்பு, - மூன்றாவது

இல்லையேல் ஆகும் இகழ, என அன்பர்காள்

சொல்லு கவி, யாதோ அச்சொல் ?


------------------------------------------------------------------------------------

சொற்பொருளுரை:

---------------------------

மூன்றெழுத்தில் ஓர் சொல் = மூன்று எழுத்துகளுடைய ஒரு சொல் ; முதல் இலையேல் = அச்சொல்லில் முதல் எழுத்தை நீக்கிவிட்டால் ; மாதங்கம் = எஞ்சிய இரு எழுத்துகளும் சேர்ந்து யானைஎன்று பொருள் படும் ; ஏன்ற இரண்டாவது = அச்சொல்லில் உள்ள இரண்டாவது எழுத்து ; இலையேல்= இல்லாவிட்டால் ; சம்பு = நரி என்று பொருள்படும் ; மூன்றாவது இல்லையேல் = மூன்றாவது எழுத்தை நீக்கிவிட்டால் ; ஆகும் இகழ = இகழஎன்னும் பொருள்படும் ; என அன்பர்காள் சொல்லு கவி = என பாவல(ர்) அன்பர்கள் சொல்வார்கள் ; யாதோ அச் சொல் ? அந்தச் சொல் யாது ?

-----------------------------------------------------------------------------------

பாடலின் கருத்துரை:

-----------------------------

மூன்று எழுத்துகள் உள்ள ஒரு சொல் இருக்கிறது. அந்தச் சொல்லில் முதல் எழுத்தை நீக்கிவிட்டுப் படித்தால் யானைஎன்று பொருள் படும் ; இரண்டாவது எழுத்தை விட்டுவிட்டுப் படித்தால் நரிஎன்று பொருள் படும்; மூன்றாவது எழுத்தை விட்டுவிட்டுப் படித்தால் இகழ” (இகழ்ச்சி) என்று பொருள்படும்; அந்தச் சொல் என்ன என்று சொல்லுங்களேன் !

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மடங்கல் (ஆவணி) 05]

{21-08-2022}

------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக