புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

மலர் (58) தமிழழகன் பாடல் - பெட்டிக்குள்ளே சுருளும் !

 

பாம்புக்கும் திரைப்படத்திற்கும் ஒப்புமை ! (தனிப்பாடல்.193)

------------------------------------------------------------------------------------

பாடல்களில் இரட்டுற மொழிதல் என்பது ஒருவகை. இதைச்சிலேடைஎன்றும் சொல்வார்கள். இரட்டுற மொழிதலில்  வல்லவர் காளமேகப் புலவர். சந்தக் கவிமணி தமிழழகனார் படைத்த ஒரு இரட்டுற மொழியும் பாடல் !

------------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள் ளேசுருளும்  பின்படமே தான்காட்டும் !

முட்டிக்கொண் டோடுவரே முன்பார்க்க - கொட்டகையில்

ஆடும்   இசையோடும்   ஆடும்போ   தேநகரும்,

பாடுந்   திரைப்படந்தான்   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

-----------------------------------------------------------------------------------

 

பெட்டிக்குள்ளே   சுருளும் !  பின், படமே காட்டும் !

முட்டிக் கொண்டு  ஓடுவரே முன் பார்க்க ! – கொட்டகையில்

ஆடும்  இசையோடும் ! ஆடும் போதே நகரும் !

பாடும்  திரைப்படம்தான்,   பாம்பு !


-----------------------------------------------------------------------------------

பாம்பு:

------------

பாம்பாட்டியின் பெட்டிக்குள் சுருண்டு படுத்திருக்கும்பெட்டியைத் திறந்தால் தலையை உயர்த்திப் படம் எடுத்து ஆடும் ; பாம்பாட்டி வேடிக்கை காட்டுகிறார் என்றால் முட்டி மோதிக் கொண்டு மக்கள் விரைந்து ஓடுவார்கள் ;( கொட்டு அகையில் = பெட்டியிலிருந்து வெளியே எடுத்து விடுகையில் ) பாம்பாட்டி தன் பெட்டியிலிருந்து பாம்பை எடுத்து வெளியே  விட்டால், மகுடி இசைக்கேற்ப அது ஆடும்அவ்வாறு ஆடும்போது அசைந்து அசைந்து நகர்ந்து ஆடும்  !

---------------------------------------------------------------------------------- 

திரைப்படம்:

--------------------

திரைப்படம் பெட்டிக்குள் சுருள் வடிவில் இருக்கும் ; அதை எடுத்து படப் பெருக்கியில் (PROJECTOR) இணைத்து இயக்கினால் திரையில் படத்தைக் காட்டும் ; படத்தை முன் வரிசை இருக்கையில் அமர்ந்து பார்ப்பதற்காக மக்கள் முட்டி மோதிக் கொண்டு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஓடுவார்கள் ; கொட்டகையில் உள்ள திரையில்  படம் ஆடும் (ஓடும்) ; அவ்வாறு ஓடுகையில் இசையும் அதனுடன் சேர்ந்துகொள்ளும் ; படம் ஓடும் போதே அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொன்றாக நகரும்  !

 

ஆகையால் பாம்பும் திரைப்படமும் ஒன்றுக்கொன்று ஒப்புமையானது ஆகும் !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

"தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

 [திருவள்ளுவராண்டு: 2053,மடங்கல் (ஆவணி)06]

{22-08-2022}

 -----------------------------------------------------------------------------------

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக