புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

மலர் (49) பழமொழி நானூறு - காட்டிக் கருமம் கயவர் மேல் !

மீன் உலர் களத்துக்குப் பூனை காவலா ?

 

மரத்தடியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார், அவ்வூரில் நெடு நாள்களாகத் தங்கியிருக்கும் ஒரு முனிவர். ஊராருக்கு நல்வழி காட்டி நல்வாக்குச் சொல்லிவரும் ஞானி அவர் !  முனிவரை அணுகிய பெண்ணொருத்தி, ”ஐயா ! இன்று நான் வெளியூர் செல்கிறேன் ! திரும்பிவர நான்கு நாள்களாகும். ஆனால் ஈரம் காயும் முன் வயலில் நெல் விதைத்தாக வேண்டும். எனக்கு வேறு துணையில்லை.  பக்கத்துத் தெரு பகலவன் எனக்கு அறிமுகம் ஆனவர் தான். ஆனால் நேர்மையானவர் என்று சொல்வதற்கில்லை ! அவரிடம் நெல் விதைப்புப் பணியை ஒப்படைத்துச் செல்லலாமா ? தாங்கள் எனக்கு நல்வழி காட்டுங்கள்என்று பணிவுடன் கேட்டாள். அதற்குத் துறவி சொல்லும் மறுமொழியைப் பாருங்கள் !)

 

மாவடு போன்ற கண்களும் மயில் போன்ற சாயலையும் உடைய பெண்ணே ! உனக்கு ஒன்று தெரியுமா ? ”

 

கீழ்மைக் குணம் படைத்த எந்த மனிதனும் நம்பத் தகுந்தவன் அன்று ! நேரம் வரும் போது நம்மைக் காட்டிக் கொடுக்க அவன்  தயங்க மாட்டான் ! அப்படிப்பட்டக் கயமைக் குணம் படைத்த கீழ்மகனை நம்பி, தான் செய்ய வேண்டிய பணிகளை ஒப்படைக்கும் எவனும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது !

 

மீன்கள் உலர்கின்ற களத்தில் அதற்குப் பூனையைக் காவலாக வைக்க எந்த அறிவுள்ள மனிதனும் துணியமாட்டான் ! கீழ்மகனை நம்பித் தனது பணிகளை அவனிடம் ஒப்படைத்து விட்டு, அவன் செப்பமாகச் செய்து முடிப்பான் என்று நம்பி வாளாவிருக்கும் எவனும் மீனுக்குப் பூனையைக் காவலாக வைக்கும் தவறைச் செய்தவன் ஆவான் !

 

இத்தகைய கருத்துடைய பாடலை எழுதிய புலவர் பெயர் முன்றுறை அரையனார். பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறில் இடம் பெற்றுள்ள இப்பாடல் பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலைஎன்னும் பழமொழியை  உள்ளடக்கி அமைந்துள்ளது.  இதோ அந்த பாடல்:-

 

--------------------------------------------------------------------------------------------

 

காட்டிக்  கருமம்   கயவர்மேல்  வைத்தவர்

ஆக்குவர்  ஆற்றஎமக்  கென்றே  அமர்ந்திருத்தல்

மாப்புரை நோக்கின்  மயிலன்னாய் ! பூசையைக்

காப்பிடுதல்  புன்மீன்  தலை !

 

------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:

-------------------------

 

(மா + புரை) மாப்புரை = மாவடு போன்ற; நோக்கின் = கண் உடைய; மயிலன்னாய் = மயில்போன்ற அழகுடைய பெண்ணே ! எமக்கு என்றே = எமக்காக; ஆற்ற = முழுமையாக (திறம்பட); கருமம் ஆக்குவர் = பணியாற்றுவார்; கயவர் மேல் காட்டி வைத்தவர் = கீழ்மக்கள் மீது நம்பிக்கை வைத்தவர்; பூசையை = பூனையை; தலை = அதிகாரம் கொடுத்து ; காப்பிடுதல் = காவலுக்கு வைத்தல்; புன்மீன் = மீன் உலர் களம்.

 

---------------------------------------------------------------------------------------------

கருத்துரை:

--------------------

 

தான் செய்ய வேண்டிய பணியை நம்பத் தகாத வேறொரு ஆளிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுப்பவன், மீன்கள் உலரும் களத்திற்குப்  ஒரு பூனையைக் காவலுக்கு வைத்தவனுக்கு  ஒப்பாவான் !

 

------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(maraaimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 19]

{04-08-2022]

-----------------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக