புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2022

மலர் (46) பழமொழி நானூறு - ஆயிரவர் ஆனாலும் அறிவிலார் !

காய் கலா ஆகும் நிலா !

 

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள்     ஒன்றான பழமொழி   என்பது முன்றுரை அரையனார் என்பவர் இயற்றிய நானூறு வெண்பாக்களால் ஆகிய    ஒரு இலக்கியம் . ஒவ்வொரு  வெண்பாவிலும்   ஈற்றடியில் ஒரு பழமொழியை அமைத்து  இவ்விலக்கியத்தை  அவர் படைத்துள்ளார் !

 

----------------------------------------------------------------------------------------

 பாடல்.47.

----------------------------------------------------------------------------------------

 

ஆயிரவ ரானும் அறிவிலார் தொக்கக்கால்

மாயிரு ஞாலத்து மாண்(பு) ஒருவன் போல்கலார்

பாய்இருள் நீக்கும் மதியம்போல் பல்மீனும்

காய்கலா வாகும் நிலா.

 

------------------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதிய பாடல்:

------------------------------------------------------------------------------------------

 

ஆயிரவர்  ஆயினும்  அறிவிலார் தொக்கு அக்கால்

மா இரு ஞாலத்து மாண்பு ஒருவன் போல் கலார்

பாய் இருள் நீக்கும் மதியம் போல் பல் மீனும்

காய் கலா ஆகும் நிலா.

 

------------------------------------------------------------------------------------------

பொருளுரை:

----------------------

 

இரவு நேரத்தில் எங்கும் சூழ்ந்துள்ள இருளை, நிலவு தன் இன்னொளியால் நீக்கிவிடுகிறது. ஆனால், பல விண்மீன்கள் ஒன்று கூடி ஒளிர்ந்தாலும் கூட, நிலவின் ஒளிக்கு அவை ஈடாகா; இருளைப் போக்கா ! அதுபோல, அறிவு இல்லாதவர்கள் ஆயிரம்பேர் திரண்டாலும், அறிவிற் சிறந்த   மாண்புடைய ஒருவரைப் போல அவர்கள்  விளங்க முடியாது !

 

------------------------------------------------------------------------------------------

பொருள் விளக்கம்:

-------------------------------

 

பல விண்மீன்கள் ஒன்றிணைந்து ஒளிர்ந்தாலும்  ஒரு நிலவின் ஒளி போல இருளை விரட்ட அது உலகிற்குப் பயன்படாது. அதுபோல, அறிவிலார் பலர் திரண்டாலும் அவரால் உலகிற்குச் சிறிதும் பயன் இல்லை !

 

-----------------------------------------------------------------------------------------

அருஞ்சொற் பொருள்:

-------------------------------------

 

பாய் இருள் = எங்கும் பரவியுள்ள இருள் ; நீக்கும் = போக்கும் ; மதியம் போல் = நிலவைப்போல ; பல் மீனும் = பல விண்மீன்கள் ஒன்று சேர்ந்து ஒளிர்ந்தாலும் ; நிலா காய்கல் ஆ(கா) = நிலவு போல  ஒளி தர முடியாது. (அதுபோல), அறிவிலார் = அறிவில்லாதவர்கள் ; ஆயிரவர் ஆனும் = ஆயிரக் கணக்கில் திரண்டாலும் ; தொக்கு = புல்லிய ; அக்கால் = குணமுடையவர்களே ;  மா இரு ஞாலத்து - இப்பெரிய உலகத்தில் ; மாண்பு ஒருவன் = பேரறிவு உடைய மாண்பு மிக்க ஒருவர் போல ; கலார் = ஆகமுடியாது.

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 19]

{04-08-2022}

------------------------------------------------------------------------------------------


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக