புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2022

மலர் (04) காளமேகம் பாடல் - சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா !

அவிழ்ந்த குடுமி ! உதிர்ந்த பாடல் !

-----------------------------------------------------------------------------------

 

[ஒருமுறை காளமேகப் புலவர் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) சென்றிருந்தார். அங்கு, ஒரு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த ஒருவரது குடுமி ( நீண்ட தலைமுடி ) அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது. உணவு பாழ்பட்டுப் போயிற்று !


பசி மயக்கத்தில் இருந்த காளமேகத்திற்கு, உணவு கிடைத்தும் உண்ண முடியாமல் பாழ்பட்டுப் போயிற்றே என்ற ஆதங்கத்தில் கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அடக்கமுடியாச் சினமடைந்த  காளமேகம், குடுமி வைத்திருந்தவரைப் பார்த்து உடனடியாகப் பாடிய பாடல் இது]

-------------------------------------------------------------------------------------

பாடல்:

-------------------------------------------------------------------------------------

 

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்  சோழியா!  சோற்றுப்

பொருக்குலர்ந்த  வாயா ! புலையா ! திருக்குடந்தைக்

கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்

போட்டாளே ! வேலையற்றுப்  போய் !


------------------------------------------------------------------------------------

பொருள்:-

--------------------

 

முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ,  என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டு மானிடா ! உணவை நாகரிகமாக உண்ணத் தெரியாமல் வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ள, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே ! குடந்தை நகரில் வாழும் கோட்டானே! (பெரிய ஆந்தையே ), நாயினும் இழிந்தவனே !, வானரமே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி !

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

 -------------------------


சுருக்கு = நீண்ட தலைமுடியை புரிமணை போல் சுற்றி முடிச்சுப் போட்டு வைத்தல்; முன்குடுமி = தலையின் முன் உச்சியில் வளையமாய்ச் சுற்றி வைத்த நீண்ட தலைமுடி; சோழியா = சோழ நாட்டவனே; சோற்றுப் பொருக்கு = உலர்ந்த சோறு;  புலையா = இழிமகனே; திருக்குடந்தை = குடந்தை நகரின் ; கோட்டானே = பெரிய ஆந்தையே !

------------------------------------------------------------------------------------

 பின்குறிப்பு:

தமிழில் மேதைகளாக இருப்பவர்களுக்கு சினமும் கூடுதலாக இருக்குமோ ?

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 23]

{06-06-2022}

-----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக