அவிழ்ந்த குடுமி ! உதிர்ந்த பாடல் !
-----------------------------------------------------------------------------------
[ஒருமுறை காளமேகப் புலவர் குடந்தைக்கு (கும்பகோணத்திற்கு) சென்றிருந்தார். அங்கு, ஒரு விடுதியில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, பக்கத்தில் உணவு அருந்திக் கொண்டிருந்த ஒருவரது குடுமி ( நீண்ட தலைமுடி ) அவிழ்ந்து, காளமேகத்தின் உணவில் விழுந்தது. உணவு பாழ்பட்டுப் போயிற்று !
பசி
மயக்கத்தில் இருந்த காளமேகத்திற்கு, உணவு கிடைத்தும்
உண்ண முடியாமல் பாழ்பட்டுப் போயிற்றே என்ற ஆதங்கத்தில் கட்டுக்கடங்காத கோபம்
வந்தது. அடக்கமுடியாச் சினமடைந்த காளமேகம்,
குடுமி வைத்திருந்தவரைப் பார்த்து உடனடியாகப்
பாடிய பாடல் இது]
-------------------------------------------------------------------------------------
பாடல்:
-------------------------------------------------------------------------------------
சுருக்கவிழ்ந்த முன்குடுமிச்
சோழியா! சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா !
புலையா ! – திருக்குடந்தைக்
கோட்டானே ! நாயே ! குரங்கே ! உனையொருத்திப்
போட்டாளே ! வேலையற்றுப் போய்
!
------------------------------------------------------------------------------------
பொருள்:-
--------------------
முடிந்து வைத்திருந்த குடுமி அவிழ்ந்து என் இலையில் விழ, என் உணவைப் பாழ்படுத்திவிட்ட சோழநாட்டு
மானிடா ! உணவை நாகரிகமாக உண்ணத் தெரியாமல் வாய் ஓரங்களில் ஒட்டிக் கொள்ள, அவை உலர்ந்து காட்சியளிக்கும் இழிமகனே ! குடந்தை நகரில் வாழும்
கோட்டானே! (பெரிய ஆந்தையே ), நாயினும் இழிந்தவனே !, வானரமே ! உன்னைப் போய் வேறு வேலையில்லாமல் பெற்றுப் போட்டாளே ஒருத்தி
!
------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
சுருக்கு = நீண்ட தலைமுடியை புரிமணை போல் சுற்றி முடிச்சுப் போட்டு வைத்தல்; முன்குடுமி = தலையின் முன் உச்சியில் வளையமாய்ச் சுற்றி வைத்த நீண்ட தலைமுடி; சோழியா = சோழ நாட்டவனே; சோற்றுப் பொருக்கு = உலர்ந்த சோறு; புலையா = இழிமகனே; திருக்குடந்தை = குடந்தை நகரின் ; கோட்டானே = பெரிய ஆந்தையே !
------------------------------------------------------------------------------------
தமிழில் மேதைகளாக இருப்பவர்களுக்கு சினமும் கூடுதலாக இருக்குமோ ?
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(maraimani2021@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ப் பொய்கை”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
23]
{06-06-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக