புலவர் பலர் யாத்த பூந்தமிழ்ப் பாடல்களின் அணிவகுப்பு !

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 6 ஜூன், 2022

மலர் (01) காளமேகம் பாடல் - ஒன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறே ழெட்டு !

எண்களை வைத்து எழுத்தில் ஒரு பாடல் !

------------------------------------------------------------------------------------

 

காளமேகம் கி.பி.15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது. இரு பொருள்படப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர்.

-----------------------------------------------------------------------------------

பாடல்:

-----------------------------------------------------------------------------------


ஒன்றிரண்டு   மூன்றுநான்   கைந்தாறே  ழெட்டு

ஒன்பது   பத்துப்பதி   னொன்றுபன்னி  ரெண்டுபதி

மூன்றுபதி   நான்குபதி   ஐந்துபதி   னாறுபதி

னேழ்பதி   னெட்டுபத்தொன்  பது !

-----------------------------------------------------------------------------------

சந்தி பிரித்து எழுதப்பட்ட பாடல்

-----------------------------------------------------------------------------------


ஒன்று,இரண்டு   மூன்று,நான்கு   ஐந்து,ஆறு,ஏழு   எட்டு

ஒன்பது   பத்து,பதினொன்று  பன்னிரண்டு, பதின்

மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதின்

ஏழு, பதினெட்டு, பத்தொன்பது !

------------------------------------------------------------------------------------

 

அறுநூறு ஆண்டுகளுக்கு முன் காளமேகத்தால் எழுதப்பட்ட இந்தப் பாடலில் எண்கள் ஒன்று முதல் பத்தொன்பது வரை வரிசையாகச் சொல்லப் படுகிறது. இதைத் தவிர பாடலுக்கு வேறு பொருள் ஏதுமில்லை. ஆனால் பலரையும் வியக்க வைக்கும் ஆற்றலுள்ள பாடல் !

 

நேரிசை வெண்பாவில் அமைந்துள்ள இந்தப் பாடல் இன்னும் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், இலக்கணம் என்னும் வரையறைக்குள் அது அமைந்திருப்பதே. நேற்று எழுதிய புதுக்கவிதை நாளை உயிர்ப்புடன் இருக்காது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய செய்யுள்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றன. இலக்கண வரையறையின் கட்டமைப்பே மரபுக் கவிதைகளையும், மரபு வழியில் அமைந்த செய்யுள்களையும் இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது !

 ------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(maraimani2021@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பொய்கை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 23]

{06-06-2022}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக